திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட இரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய நகராட்சி பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை செப். 23 –
பொதுப்பணித்துறை அமைச்சர் திருவண்ணாமலை தலைநகர் என்பது ஆன்மிக பூமி. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஏன் பல்வேறு நாடுகளிலிருந்தும் இருந்தும் ஆன்மீக பெருமக்கள் வருகின்ற காரணத்தினாலும், நாளுக்கு நாள் ஆன்மீக பெருமக்கள் வந்து போகின்ற எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் தற்போது போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. அதனால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
விவசாயத்துறைக்கு சொந்தமான, டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னாள் செயல்பட்டு வந்த டான்காப் நிறுவனத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் வித்து தொழிற்சாலை ஒன்று நடைபெற்றது. காலபோக்கில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தில் அந்த தொழிற்சாலையை மூடிவிட்டார்கள்.
எனவே, இந்த இடம் இருப்பதை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் நான் சுட்டி காண்பித்த போது சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் அழைத்து பேசி, இந்த இடத்தினை திருவண்ணாமலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, தேர்வு செய்திருக்கிறோம். இதை ஒட்டியிருக்கின்ற அரசுக்கு சொந்தமான, வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் இருக்கிறது.
ஆகவே மொத்தம் 10 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்று அரசு கருதுகிறது. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவரை அழைத்து வந்து இந்த இடத்தினை தேர்வு செய்வதன் மூலமாக, அங்குள்ள பிரச்சனைகள் என்னவென்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே, டான்காப் நிறுவனத்தில் உள்ள துருப்பிடித்துள்ள இயந்திரங்களை சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அலுவலர்கள் அமைச்சரின் அனுமதி பெற்று அவைகளையெல்லாம் புதிய இடத்திற்கு கொண்டு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு பின்னர் தான் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து நிதி வரப்பெற்ற பின்னர் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுவது குறித்து மிகவும் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர். பா. முருகேஷ், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை, சட்டன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, வருவாய் கோட்டாட்சியர் (திருவண்ணாமலை) வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் (திருவண்ணாமலை) சந்திரா, கண்காணிப்பு பொறியாளர் (பொதுப்பணித்துறை) பழனிவேல், கோட்டப்பொறியாளர் (பொதுப்பணித்துறை) முரளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.