மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தில் கூட்ஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் தெரியவருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டுமே எஞ்சிய ஆட்டின் உடல் பாகங்களை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மற்றும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரில் கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்திய வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து சிறுத்தைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிறுத்தை பிடிபடாத நிலையில் சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கருவேலங்காட்டில் பொறுத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை இதுவரை சிக்கவில்லை. சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் 3 ஆம் நாளான நேற்று சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று கழுத்து குதறிய நிலையைில் இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கால்தடங்கள் இல்லாததால் உறுதியாக சொல்லமுடியாது முடாதெனவும் அதனால் பிரேத பிரிசோதனையின் அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் இரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர்அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் பெற்ற வனத்துறையினர் ஆட்டை உடற்கூறாய்வு செய்வதற்கு எடுத்து சென்றனர். நாய் கடித்து கொன்று இருக்க வாய்ப்புள்ளதாகவும் தடயங்கள் எதுவும் இல்லாததால் சிறுத்தைதான் அடித்துக் கொன்றது என்பதை வனத்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.