பழவேற்காடு, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவேற்காடு வன உரிமைக்குழு மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டத்தில் மறு அறிவிப்பின் நகல் குறித்து விவாதம் நடைபெற்றது.
1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம்,1972 மத்திய சட்டம் 53/ 1972 பிரிவு 21-ன் கீழ் அமைந்த வரைவு திட்டம் குறித்து வன பாதுகாப்பு காவலர் எம்.எஸ்.செல்வராஜ் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
பழவேற்காடு பகுதி மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வனத்துறையினர் சர்வதிகார ஆட்சி நடத்தும் வகையில் பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குவதும் பல்வேறு சமூக விரோத செயல்களை செய்யும் குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை விட்டு விட்டு, ஏழை எளிய மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதாக மீனவ மக்கள் குற்றம் சுமத்தினர்.
மேலும் அதில் பழவேற்காடு வனத்துறையினரால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும் மீனவ மக்கள் 2006 ஆம் ஆண்டு மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்கும் விதத்தில் வன உரிமை அங்கீகார சட்டம் இயற்றப்பட்டதுக் குறித்தும், அச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலய துறையினரிடம் இருந்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது குறித்தும் விளக்கமும் அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொது செயலாளர் துரை.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், லைட் ஹவுஸ் ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கர் தலைவர் எத்திராஜ்,சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் ஹாஜா மொய்தீன்,சமூக ஆர்வலர்கள் மீராசா,முத்து,ஏகாட்சரம் மற்றும் பழவேற்காடு பகுதி கிராம நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

















