கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தீ பந்தம் சுழற்றி கின்னஸ் சாதனை படைத்தனர், இப் போட்டியில் ராமநாதபுரம் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் 8 பேர் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்றனர்.
ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி ஆர்.ரக்சா ஸ்ரீ, 10 ஆம் வகுப்பு மாணவர் எஸ்.சந்திரசேகரன், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் எஸ்.பரத் நிவாஸ், டி டி விநாயகர் மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் எம்.சந்துரு, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவர் முகமது ஆதிப் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் பி.கிஷோர் குமார், 9 ஆம் வகுப்பு மாணவர் ஆர்.க வின், ஆர்.எஸ்.மடை அம்ரிதா மெட்ரிக் ஏழாம் வகுப்பு எஸ்.சந்தோஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். கின்னஸ் சாதனையாளர்கள் பயிற்றுநர் என்.ஹேமநாதன், ஏ. ரூபா ஆகியோருக்கு பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சுந்தர்ராஜன், களத்தாவூர் தொடக்கப் பள்ளி ஆசிரியை ஜீவஜோதி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.