கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அறிந்த திலீபனின் தந்தை மதியழகன் அந்த பெண் உனக்கு தங்கை போல அவரை காதலிக்காதே என்று கண்டித்துள்ளார். அதனை மீறியும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இவர்களது தெருவுக்கு அருகே உள்ள திடலுக்கு அந்த சிறுமியை திலீபன் தனியாக வர அழைத்துள்ளார். அச் சிறுமியும் அதனையேற்று அங்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இரவில் வீட்டிற்கு சிறுமி வராததால் சிறுமியின் தாயார் சுரேஷ் மனைவி சுதா லட்சுமி (37) என்பவர் அந்த திடலுக்கு சென்று பார்த்த போது அந்த சிறுமி ரத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
அந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் திலீபனும் தூக்கிட்டு தொங்கியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த சுதாலட்சுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர் தெருவாசிகள் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்டு நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நாச்சியார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் இறந்து கிடந்த திடலுக்கு சென்றப் போலீசார் அவர்கள் இருவரின் உடைமைகளையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.



















