கும்பகோணம், டிச. 19 –
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுக்ரீவன் வழிபட்டு பெருமை கொண்ட இத்திருக்கோயிலில், முதல் சித்தராகவும், முனிவர்களுக்கு எல்லாம் குருவாக போற்றப்படும் அகத்தியர் இக்கோயிலுக்கு வருகை தந்த நேரத்தில், இப்பகுதி கடும் வறட்சியில் சிக்கி மக்களும், கால்நடைகளும், பசிப்பிணியாலும், நோய்நொடிகளாலும் செத்து மடிந்தனர். இத்துயரை போக்க வேண்டும் என்றும், இத்தலத்திலேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் அகத்தியரை வேண்டிக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து, அகத்திய பெருமான், இத்தலத்தில் தனது திருக்கரத்தால் மேற்கு நோக்கிய சொர்ணபைரவரை பிரதிஷ்டை செய்ததுடன், தானும் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதாக உறுதியளித்தார். அதன்படி இப்பகுதியில் நல்ல மழை கிடைத்து, வறட்சி நீங்கி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இத்தலத்தில் இத்தலத்தில் பௌர்ணமி யாகம் 25 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 26 ம் ஆண்டு பௌர்ணமி யாகம் தொடக்கத்தை முன்னிட்டு, நேற்று காலை மகா யாகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து இரவு, மூலவர் அகத்தியபெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, முதன்முறையாக அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக வரிசை எடுத்து வருதலும், மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்ற பிறகு, அக்னி வளர்த்து, மங்கலஞான் பூட்ட திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.