கும்பகோணம், டிச. 19 –
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மகாமகப் பெருவிழா தொடர்புடைய ஐந்து வைணவத்தலங்களில் ஒன்றானதும், காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலம் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் ஆகும் ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது பிரம்மா அதனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை காட்டிலும் பன்மடங்கு பிரகாசமாய் ஒளிர அதனை கண்டு சூரியன் கர்வம் கொண்டார் . சூரியனின் கர்வத்தை அடக்க ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை தன்னுள் அடக்கியது . ஒளியிழந்த சூரியன் தன் தவற்றை உணர்ந்து தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க பிராத்தணை செய்ததால் ஸ்ரீ சக்கரத்தில் சக்கரபாணிசுவாமியாக, சூரியனுக்கு அருள் புரிந்தார். அது முதற்கொண்டு இத்தலம், பாஸ்கர சேஸ்திரம் என வழங்கலாயிற்று இத்தலத்தை சிறப்பித்து திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் சக்கரபாணிசுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய ஆறு விதமான பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது . மேலும் இது சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அக்னிபகவான், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் வழிபட்ட புனித தலமாகும். இத்தகைய பெருமை கொண்ட வைணவத்தலத்தில் ஆண்டு தோறும் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்வுற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு உற்சவர் சக்ரபாணிசுவாமி, சிறப்பு பட்டு வஸ்திரங்கள், விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் பிரகார உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு உள்ள ஊஞ்சலுக்கு நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி அருள்பாலிக்க, அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.