கும்பகோணம், அக். 8 –
கும்பகோணம் ஒன்றிய குழு 24 வது வார்டு தற்செயல் தேர்தல் இறுதிகட்டப் பிரச்சாரத்தை கொற்கை கிராமத்தில் மேற்கொண்ட அதிமுக மற்றும் அமமுக கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையை மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அப்பகுதுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் ஒன்றிய குழு 24வது வார்டு இடைத் தேர்தலில் திமுக சார்பில் சசிகுமாரும், அதிமுக சார்பில் சீதாராமனும், அமமுக சார்பில் விஜய் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராம்ஜி என்பவரும் களத்தில் உள்ளனர். இங்கு 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், இதன் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
பிரச்சாரத்தின் நிறைவாக நேற்று மாலை 5 மணிக்கு அதிமுக தொண்டர்களும் அமமுக தொண்டர்களும் கொற்கை கிராமத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அ ம மு க வினர் பிரச்சாரம் 5 மணியுடன் முடிவடைந்து விட்டதாக கூறி பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். அதிமுகவினர் மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறி பிரச்சாரத்தை நீட்டிப்பு செய்தனர்.
இதனால் இரு கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் நீண்டு ஒரு கட்டத்தில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக கணப்பட்டது.
இதனை தொடர்ந்து கும்பகோணத்திலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
இதனால் கொற்கை கிராமத்தில் ஏற்பட்டிருந்த பதட்ட சூழல் குறையத் தொடங்கியது.மேலும் காவல்துறையினர் இரு தரப்பினரையும் கொற்கை கிராமத்தை விட்டு வெளியேற்றியதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி திரும்பியது.