சென்னை, ஜன. 5 –
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.1.2022 அன்று நடைபெற்ற 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழாவில், பொது இடங்களில் நிச்சயமாக, உறுதியாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ரிச்சி தெரு அருகில், காஸ்மொபோலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்குப் பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.ஐ.இ.டி. கல்லூரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். பொதுமக்களும் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.





















