கும்பகோணம், ஜன. 12 –
கும்பகோணம் அருகே பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ஆம் தேதி தனது 102 ஆவது வயதில் பரிபூரணம் அடைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோயிலில் உள்ள ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் சூரியனார்கோயிலின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீமகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற புதிய பெயருடன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
27-வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்து 10 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அவரது குருமூர்த்தத்தில் குருபூஜை விழா நடைபெற்றது. தொடர்ந்து 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டத்தில் அமர்த்தி ஞானபீடரோகனம் செய்துவைத்தார்.
விழாவில் செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆதீனங்களின் ஆதீனகர்த்தர், கட்டளைத் தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் தமிழக அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.























