கும்பகோணம், செப். 01 – 

கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது ஹோட்டலுக்கு  இராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன்,22, என்பவர் வந்து ஹோட்டலில், வெங்காயம் நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து கடை உரிமையாளர் ஜெகபர் அலி முன்பாக நாற்காலி போட்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் சர்வ சாதரணமாக அமர்ந்துக் கொண்டு, பணம் தர வேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜெகபர் அலி அளித்த புகாரின் பேரில், சோழபுரம் காவல்நிலைய போலீசார் கடையில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து, கவியரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரவுடி பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. இந்த அசாதாரன நிலையைக் கண்டு அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here