கும்பகோணம், ஜூன். 16 –
சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
கும்பகோணத்தில் மாநகராட்சியாக தகுதி உயர்ந்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 01ம் தேதி முதல், ரூபாய் 10 ஆக இருந்த சாலையோர தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளுக்கான வாடகை கட்டணம் ரூபாய் 50 ஆக 5 மடங்கு உயர்தப்பட்டுள்ளது.
இது தமிழக அரசின் 2015 அரசாணைக்கு எதிரானது, ஆண்டிற்கு ரூபாய் 375 மிகாமல் வாடகை இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனை கண்டித்து கண்டன பேரணி, மற்றும் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து தெருக்கடைக்காரர்கள் பழைய வாடகையான ரூபாய் 10 தான் செலுத்வோம் என உறுதியாக தெரிவித்தனர், ஆனால் மாநகராட்சி ஆணையரின் உத்தரவுபடி, இன்று மீண்டும் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் உதவியோடு, அடாவடி வசூலில் இறங்கினார்கள். இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான சாலையோரக் கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து தஞ்சை சாலையில், ராமசாமி கோயில் சன்னதி, தஞ்சை சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும், மாநகராட்சியின் அடாவடி வசூலை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரிய கடைவீதி, பூக்கடை பகுதி, ராமசாமிகோயில் சன்னதி உள்ளிட்ட பல பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தொடர்ந்து 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : மு அ பாரதி, தஞ்சை மாவட்ட செயலாளர்,
இந்திய கம்யூ கட்சி





















