கும்பகோணம், ஜூன். 05 –

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட புராதன சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டது இதுவே முதல் முறை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட பழமையான 10 சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்  கும்பகோணம் கொண்டு வந்தனர்.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பழமையான சாமி சிலைகளை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர தொல்பொருள் ஆய்வாளர்களும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட பழமை வாய்ந்த 10 சாமி சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா கொண்டு வரப்பட்டன. அதில், கங்காள மூர்த்தி, ஞானசம்பந்தர், விஷ்ணு என்கிற வரதராஜபெருமாள், சிவன் பார்வதி, நந்திகேஸ்வரர், ஸ்ரீதேவி, நடராஜர் உள்ளிட்ட உலோக சாமி சிலைகளும் 2 துவார பாலகர்கள் கருங்கல் சிலை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட 10  சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கும்பகோணம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராம்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தற்போது மீட்டு கொண்டு வரப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல கோடி மதிப்பு உடையது. இந்த சிலைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன. உள்நாட்டில் இருக்கும் சிலைகளை மீட்டு கொண்டு வருவது சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்டு கொண்டு வருவது அவ்வளவு சுலபம் கிடையாது. அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரியமுறையில் அந்தந்த நாட்டு அரசிடம் பேசி அங்கு இருப்பது இந்திய சிலைகள் என்பதை உரிய ஆதார ஆவணங்களை கொண்டு நிரூபித்த பின்னரே வெளிநாடுகளிலிருந்து சிலைகளை மீட்டுக் கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அந்த நாட்டு அரசிடம் முறையிட்டு நிறுவனம் செய்யப்பட்டு மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளன ‌.

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது இதுவே முதன் முறையாகும். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை குழுவினர் கடுமையான உழைப்பை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக் நடராஜன், துணை கண்காணிப்பாளர் கதிரவன், ஆய்வாளர்கள் ரவீந்திரன், இளங்கோவன், உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here