கும்பகோணம், பிப். 16 –
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 21 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் சட்டைக்கு இஸ்திரி போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பிரச்சாரக் கூட்டங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு நாளை பிப்ரவரி 17ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை இடைவிடாத பிரச்சாரங்களால் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாளை மாலை 6 மணிக்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் 21வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தமயந்தி துரைராஜன் ஸ்ரீநகர் காலனியில் வாக்கு கேட்க சென்ற போது அங்கு உள்ள சலவைத் தொழிலாளியுடன் வாக்கு சேகரித்த ஒரு சட்டைக்கு இஸ்திரி போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார் இதில் வார்டு செயலாளர் துரைராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.