கும்பகோணம், பிப். 16 –

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பிரச்சாரக் கூட்டங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு நாளை பிப்ரவரி 17ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை இடைவிடாத பிரச்சாரங்களால் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாளை மாலை 6 மணிக்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் திமுக பேரூராட்சி செயலாளர் பாலசுப்ரமணியன் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here