கும்பகோணம், ஏப். 19 –

தமிழக திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில்  வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ இராமநவமியை உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீஇராமபிரானுக்கு 1008 பொற்காசுகளை கொண்டு கனகாபிஷேகமும் தொடர்ந்து பல்வகை நறுமணமிகு மலர்களை கொண்டு விசேஷ மலர்களான அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிண்ணகர் என போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலை போற்றி பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர்.

திருப்பதி வேங்கடாஜலபதி சுவாமியை போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக வெங்கடாசலபதி என்ற பெயருடனும் புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும் விளங்குகிறார்.

மேலும், தாயார் பூமிநாச்சியார் மூலவரான பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார்கள். மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் உள்ளார். இங்கு பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது.

திருப்பதிக்கு மூத்தவராக இத்தல இறைவன் விளங்குவதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்தப்பட வேண்டிய பிராத்தணைகளை அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கே செலுத்தினாலும் முழு பலன் உண்டு என வரலாறு கூறுகிறது . தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது . என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமியை முன்னிட்டு, சீதா கல்யாணம், கனகாபிஷேகம், பட்டாபிஷேகம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  ஸ்ரீராமபிரான், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் ஆகியோருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, 1008 பொற்காசுகள் கொண்டு கனகாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

தொடர்ந்து அனுமனுக்கும் கனகாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முல்லை, மல்லிகை, வெண் தாமரை, வெள்ளை மற்றும் சிவப்பு அரளி மரிக்கொளுந்து உள்ளிட்ட பல்வகை நறுமணம் மிகு வண்ண மலர்களை கொண்டு சிறப்பு மலர்களான அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here