திருவாரூர், அக். 05 –
திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானதும் அவ்வூர் மக்களுக்கு பொதுவாகவும் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் கனகசுப்பிரமணியன் என்பவரும் அதிமுக முன்னாள் கிளை செயலாளருமான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு குத்தகை சாகுபடிக்காக நான்காண்டுகளுக்கு அந்நிலத்தினை எடுத்து அதனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், அவர் கோவிலுக்கு தர வேண்டிய நெல் மூட்டைகள் தர மறுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்காக கிராமத்தினர் பணம் கேட்ட போது அந்த இடத்தை தான் தனது தந்தை பெயரில் பட்டா மாறுதல் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட அக்கிராமத்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, அதுக்குறித்து குடவாசல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது இந்த சம்பவம் உண்மை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை அவ்வூர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் அரசு தரப்பு அலுவலர்கள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று கனகசுப்பிரமணியன் அந்த நிலத்தை உழுது விதை தெளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, இன்று அந்த நிலத்தை மீண்டும் கிராமத்திற்கு சொந்தமானது எனக் கூறி அந்நிலத்தை கையகப்படுத்தி மீண்டும் டிராக்டர் கொண்டு உழுது விதை தெளித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், அந்நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ஒன்றரை கோடி என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பிரச்சினைக்குறித்து காவல்துறை மற்றும் வருவாய்துறை உயர் மட்ட அலுவலர்கள் கிராம மக்களுக்கு பொதுவாகயிருக்கும் மாரியம்மன் கோவில் நிலத்தை, உடனடியாக மீட்டு தரவும், அந்நபர் மீது நில மோசடி வழக்கு தொடர்ந்து அவர்மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: வரதராஜன், தினேஷ்குமார்
கிராம மக்கள் தோட்டக்குடி.





















