மயிலாடுதுறை,மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காவல்துறைக்கு மாமூல் கட்டி விட்டு நகரம் கிராமம் என ஒவ்வொரு பகுதியாக பிரித்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதிவாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாக்கெட் சாராயம் விற்பனையும் வெகு ஜோராக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதில் உச்சகட்டமாக மயிலாடுதுறை நகரில் முக்கிய பகுதியான திருஇந்தளூர் வடக்கு வீதி பகுதியில் அண்ணா நகரில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
அதன் காரணமாக அப்பகுதி பெண்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சாராய விற்பனை நடைபெறும் இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 108 வைணவ திவ்ய தேசங்களில் 28 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயங்களுக்கு அருகில் டாஸ்மார்க் கடைகளை திறக்க கூடாது என்ற அரசின் சட்டவிதி உள்ள நிலையில் தற்போது அங்கு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவது. அச்செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அது தொடர்பான தற்போதைய வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



















