குன்றத்தூர், ஏப். 07 –
3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றுக்கூடி உக்ரைன் -ரஷ்யா போரை நிறுத்தக் கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குன்றத்தூர் அருகேவுள்ள கோவூரில் பிரார்த்தனை செய்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கு மேலாக போர் செய்வது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில் உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் வாழ்வாதாரத்தை இழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கோவூரில் உள்ள சென்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போரை நிறுத்தக் கோரியும் உக்ரைனில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கல்லூரியை சுற்றி நடந்து சென்றும், கூட்டு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். மேலும் NO WAR என்ற சொற்களின் வடிவில் பல மாணவ மாணவியர் நின்று அமைதிக்கான முழக்கமிட்டனர்.