சென்னை, ஏப். 07 –
சென்னை தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் உலக ஆரோக்கிய தினத்தை அனுசரிக்கும் வகையில் மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நோயாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மண் தொட்டிகளை வாங்கி அதில் அதிக அளவு ஆக்ஸிஜன் வெளியிடக்கூடிய தாவரங்களை நோயிளிகளுக்கு வழங்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன் தொடக்கமாக இன்று சென்னையில் உள்ள 14 மருத்துவ மனைகளில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நோயாளிகளுக்கு பூந்தொட்டியை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மேலும் பள்ளியின் மாணவர்கள் உலக ஆரோக்கிய தினம் கருத்தாக்கம் மீது வரைந்திருக்கும் அவர்களது ஓவியங்களை மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி குறித்து அப்போலோ மருத்துவமனையின் இயக்குனர் ஷர்ஷத் ரெட்டி கூறுகையில் ஆரோக்கியமான எதிர்காலம் மற்றும் சிறப்பான பூமியை இணைந்து உருவாக்குவது என்ற குறிக்கோளுக்காக தனிநபர்கள் ஆகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டாக செயல்படுவது இன்றியமையாதது என்று கூறினார்.




















