ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயவர்நீரை நன்னீராக்கும் நிலையங்களை துவக்கி வைத்தார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு படித்த மாணவர்கள், 2018-19ம் கல்வியாண்டில் தற்போது 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 151 மாணவர்களுக்கு ரூ.8.97 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபால் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 39 லட்சம் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் ஏறத்தாழ 15.50 லட்சம் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்படவுள்ளன.
எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன் அரசு உயர்நிலைப்பள்ளி, கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து சிறப்பாக செயல்படுத்தப்படும், இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.