சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும், நீடித்த நிலைத்தன்மையினை உறுதி செய்வதிலும் ஆர்வம் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் என்ற பெயரில் நிறுவனத்தை துவக்கி, மதிப்புக் கூட்டப்ட்டுள்ள பொருட்கள் உற்பத்தியினை அதிகரிக்கவும், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் பல்வேறு முன்னெடுப்புகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
அதன் மூலம் நம் மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என அரசு இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அத்தொழில் சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறது. இதில் பெருமளவில் பெண்களுக்கும், குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ளவர்கள் என சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனால் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதனை அரசு கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, அப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அம்முயற்சியால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அதே சமயம் அத்தொழில் சார்ந்த நிறுவனங்கள் நிலைத் தன்மையுடன் இயங்கிட வழி வகுக்கும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.






















