அரியலூர், ஜூலை. 28 –
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குடப்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கான துவக்கவிழா நடைப்பெற்றது. அதனை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
முதலவதாக செந்துறை ஒன்றியம் சின்ன ஆனந்தவாடி கிராமம், காலனி கீழத்தெருவில் ரூ.7.76 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் 58 கீ.மீ. தூரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், சின்ன ஆனந்தவாடி மேலத்தெருவில் ரூ. 9.59 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், ஆனந்தவாடி கிராமத்தில் ரூ.6.84 இலட்சம் மதிப்பீட்டில் மேலத்தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணியினையும், ஆனந்தவாடி கிராமத்தில் ரூ.8.78 இலட்சம் மதிப்பீட்டில் ஆனந்தவாடி – சோழன்குறிச்சி ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும் அதனைத் தொடர்ந்து, உஞ்சினி கிராமத்தில் ரூ.12.10 இலட்சம் மதிப்பீட்டில் உஞ்சினி வடக்குத் தெருவில் உள்ள குளம் ஆழப்படுத்துதல் பணியினையும், உஞ்சினி ஊராட்சியில் ரூ. 13.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கட்டடம் அமைத்தல் பணியினையும், உஞ்சினி கிழக்கு தெருவில் ரூ.11.40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணியினையும் துவக்கி வைத்து, அப்பணிகளை எல்லாம் தரமான கட்டுமானப் பொருட்கள் கொண்டு விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அப்போது அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, குமிழியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மருத்துவமனைக்கு மேலும் விரிவுப்படுத்தும் வதமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டார சுகாதாரம் மைய கட்டடம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து அடங்கிய பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பரணம் கிராமத்தில் ரூ. 12.13 இலட்சம் மதிப்பீட்டில் பரணம் – செல்லியம்மன் கோவில் குளம் ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணியினையும், மேலும், பரணம் கிராமத்தில் ரூ.6.81 இலட்சம் மதிப்பீட்டில் தெற்கு பரணம் சிமெண்ட் சாலை அமைத்தல் பணியினையும், வடக்கு பரணம் கிராமத்தில் ரூ. 13.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் அமைக்கும் பணியினையும், பின்னர் செம்மண்பள்ளம் கிராமத்தில் ரூ.53.43 இலட்சம் மதிப்பீட்டில் நாகல்குழி முதல் செம்மண்பள்ளம் வரை 0-0-1-670 சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, கீழமாளிகை ஊராட்சியில் ரூ.37.59 இலட்சம் மதிப்பீட்டில் கீழமாளிகை முதல் இரட்டை ஆலமரம் வரை 0-0-1-150 சாலை அமைக்கும் பணிகளையும், நல்லாம்பாளையம் 0-0-1-650 வரை சாலை அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்துப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், துணை இயக்குநர் சுகாதாரம் அஜித்தா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
























