கும்பகோணம், மே. 01 –
கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி,ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் படி, கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் தினமான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பெரும்பாண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் லதா வட்டாட்சியர் தங்க பிரபாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள்,பொது நிதி செலவின விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படடன.
குறிப்பாக,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள், கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதாரம்,பள்ளி, அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதில்,பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுதிறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழனிச்சாமி நகர் ஆட்டோ நகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை வசதி அமைத்து தர வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் காலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்வதற்கு விளையாட்டு மைதானம் அமைத்துத் தரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.





















