கும்பகோணம், செப். 27 –
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த கரும்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் சுந்தர விமலநாதன் தலைமையில் விவசாயிகள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கடந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பருவம் தப்பிய பெருமழையால் சாகுபடி பாதித்து ரூபாய் 1,500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்ட நிலையில், இதுவரை அதற்கான இழப்பீடு தொகையினை வழங்காதததை கண்டித்தும், இதனை உடனடியாக பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய வட்டியுடன் வழங்க, மத்திய மாநில அரசுகள் நிர்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தி, நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கண்களை கருப்பு துணியால் கட்டியும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.