பாண்டிச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்…
புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு ,அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பாஸ்கர், பிரகாஷ் குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.