திருவண்ணாமலை பிப்.18-
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் வருகை தந்ததையட்டி நேற்று (16.02.2022) மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி அலங்கார ஊர்தியினை நாதஸ்வர மேளதாளத்துடன், மலர் தூவி வரவேற்று, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவற்றில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் வருகையை முன்னிட்டு அலங்கார ஊர்திக்கு சிறப்பான நாதஸ்வர மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை விளக்கும் விதமாக கலை பண்பாட்டு துறை வாயிலாக மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய நாட்டுப்புற கிராமிய நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து, பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும். வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி பயணித்த சாலை நெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்ததோடு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .ராஜகாளிஸ்வரன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்கள், கலை பண்பாட்டுத்துறை சார்பாக இசைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.





















