ராமநாதபுரம், ஜூன் 26-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகராவ் பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியளர்களுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.காவார் கிராமத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளையும், தெற்குதரவை ஊராட்சிக்குட்பட்ட வைரவன்கோவில் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணறு உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ததோடு கிராம பொது மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் வழங்கிட ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள் உட்பட 2 ஆயிரத்து 306 குக்கிராமங்கள் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக 79.4 எம்எல்டி அளவு குடிநீர் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி ஊரக பகுதிகளில் ஆயிரத்து 295 குக்கிராமங்களுககு தினந்தோறும் என்ற அடிப்படையிலும் 788 குக்கிராமங்களுக்கு ஒரு நாள் இடைவெளியில் 223 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.13.82 கோடி மதிப்பில் 377 குடிநீர் திட்டம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் வழங்கிட இயலாத நிலையில் உள்ள கிராமங்கள் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த இயலாத நிலையில் உள்ள கிராமங்கள் என்ற அடிப்படையில் 45 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களுககு தமிழ்நாடு குடிநீ் வடிகால் வாரியத்தின் மூலம் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வினியோகம் தொடர்பான புகார்களை பொது மக்கள் குறைகளை தெரிவித்திட ஏதுவாக 1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 82 புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் வினியோகம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மண்டல அளவில் துணை ஆட்சியர்/உதவி இயக்குனர், நிலை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதேபோல, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் தொடர்பாக பெறப்படும் புகார் மற்றும் செய்திகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது., என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சுற்றுப்பயண ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் (காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்) ஜவகர் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, ராமமூர்த்தி, உதவி பொறியாளர் ஹேமா உட்பட பலர் உடன் வந்தனர்.