தஞ்சாவூர்,  ஏப். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி. சமூக சேவகரான இவருக்கு மனைவியும், திருமணம் ஆன ஒரு மகளும் உள்ளனர். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கத் தலைவராகவும் உள்ளார்.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த லயன்ஸ் சங்கம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது இடது கை ஆள்காட்டி (தேர்தல் மை வைக்கும்) விரலை பின்பக்கமாக, 100 வினாடிகளில் 100 முறை திருப்பி சாதனை புரிவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நேற்று திங்கட்கிழமை உலக சாதனை முயற்சி நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க மாநிலத் தலைவரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சவரிராஜன், துணை ஆளுநர் ராஜேந்திரன், இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கலையரசி, தலைமை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் சக்திவேல், தலைமை ஆலோசகர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைவாக, அதாவது 82 வினாடிகளில் 100 முறை விரலை பின்னோக்கி, தெட்சிணாமூர்த்தி மடக்கி உலக சாதனை படைத்தார்.

சாதனை படைத்த தட்சிணாமூர்த்தியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து உலக சாதனை நிறுவனத்தின் சார்பில், உலக சாதனைக்கான சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை முனைவர் ராணி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here