மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி வைத்த தீயில் கருகிய காதலன் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ள காதலியின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் 24 வயது நிரம்பிய ஆகாஷ் என்பவராவர். மேலும் அவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 22 வயது நிரம்பிய மகள் சிந்துஜா என்பவர் மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2 ஆம் ஆண்டு கல்வி பயின்று வந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால் சிந்துஜா விடம் பேசாமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று பூம்புகாரில் ஆகாஷ் மற்றும் சிந்துஜா நேரில் சந்தித்து பேசியதாகவும் பின்னர் அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒரே டூவீலரில் மயிலாடுதுறை வந்துள்ளனர்.
மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் வந்த போது ஆகாஷ் தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீது ஊற்றி தீ வைத்ததுடன் தன்மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்..மேலும் அதுக் குறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆகாஷ் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அவ்வழக்கினை கொலை வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


















