திருவண்ணாமலை, ஜூலை.29-
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்பதை கண்டித்து அதிமுகவினர் தங்களது வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கிக்காலில் தனது இல்லத்தின் முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையிலும் கீழ்நாத்தூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் தனது இல்லத்தின் முன்பும் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதே போல ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கிளையூரில் ஒன்றிய கழக செயலாளர் எம்.சி.அசோக் தலைமையில் அதிமுகவினர் தங்களது இல்லங்கள் முன்பு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் வெள்ளையன், குப்பன் கிருஷ்ணமூர்த்தி திருப்பதி கிளைக் கழக செயலாளர் சங்கர், மூத்த நிர்வாகி ரவிந்திரன் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பலாமரத்தூர் மேல்சிலம்படி தென்மலை அத்திப்பட்டு கல்லாத்தூர் ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கழக நிர்வாகிகள் இல்லங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கிளையூர் எம்.சி.அசோக் செய்திருந்தார்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம் சாலையனூர் ஊராட்சி அலுவலகம் அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் டி.மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமிர்தம்மாள் சண்முகம் பால்கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் எம்.அருள்தாஸ், மோகன் வாசுதேவன் பாபு சக்திவேல் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் ஒன்றியத்தில் அதிமுக அலுவலகத்தின் முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.