மயிலாடுதுறை, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவின் போது ஒலிபெருக்கியை நிறுத்திய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர் சார்பாக அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் திருமுறைப்பால் பெருவிழா, திருவாசகம் முற்றோதல், திருக்கல்யாணம் உற்சவம், திருமுறை வீதியுலா, திருவிளக்கு பூஜை, உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.
நேற்று செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி விழா அன்று கோவிலில் ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறி அறநிலை துறை அதிகாரி கோவிலுக்குள்ளே வந்து ஒலிபெருக்கியை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் கோவிலுக்கு எதற்கு சாமி கும்பிட வருகிறீர்கள் என சொன்னதாக கூறப்படுகிறது.
அதனைக் கண்டித்து பொதுமக்கள் கோவில் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அமைந்துள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியை நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர் சார்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.























