திருவாரூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்றுக் காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தோட்டம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடைய மகன் கட்டிட பணி செய்யும் மாதவன் என்ற இளைஞர் தனது நண்பருடன் வேலைக்கு திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது நன்னிலம் அருகே ஆண்டி பந்தல் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது.. இரு சக்கர வாகனத்தை மோதுவது போல் தனியார் பேருந்து வந்துள்ளது.
ஆத்திரமடைந்த மாதவன் பேருந்தை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். சன்னாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, மாதவன் பேருந்து ஓட்டுநரை கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார். ஓட்டுனர் மீது கல் படாமல், பேருந்தின் வலது புற கண்ணாடி உடைந்து பேருந்தின் உள்ளே இருந்த கச்சனத்தை சேர்ந்த36 வயதுடைய இந்திரா என்ற பெண் பயணியின் கழுத்துப் பகுதியில் அடிபட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் இந்திராவை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அழைத்து சென்றுச் சேர்த்தனர்.
தொடர்ந்து முதல் உதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திராவை மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்திரா வைத்திருந்த கைப்பையில் ஆதார் கார்டு மற்றும் ரூபாய் 23000 ரொக்கம் ஆகியவை இருந்ததை. ஆட்டோ டிரைவர்கள் பத்திரமாக நன்னிலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனைக் கண்ட பொதுமக்கள் ஆட்டோ டிரைவர்களின் நேர்மையை பெரிதும் பாராட்டினர்.