திருவாரூர், நவ. 30 –
திருவாரூர் அருகே உள்ள எண்கண் எனும் கிராமத்தில் வெகு நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைத்து தரும் படி அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தும், மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்கிராம மக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் எண்கண் கிராமத்தில் உள்ள பட்டக்கால் தெருவில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தெருவிற்கு வரும் பிரதான சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது மிகவும் சேதமடைந்து மக்கள் பயன்பாடுத்த முடியாத நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக அச்சாலை சேரும் சகதியுமாகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பயணிப்பதற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தினம் தோறும் அப்பகுதியில் வசிப்பவர்களில் வேலை செல்வோர், பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் என அனைத்து தரப்பினரும் தட்டு தடுமாறி மிகவும் சிரமத்துடன் அச்சாலையை கடந்து வருகின்றனர்.
அச்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸை அழைத்தால் இச்சாலையின் வழியாக வர முடியாததால் உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டும் விதமாக இன்றைய தினம் நாற்று நட்டு அப்பகுதி வாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலையை சரி செய்து தராவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: 1.மகேஸ்வரி, 2.ராஜா – எண்கண் தெரு வாசிகள்




















