பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
அதனையடுத்து ஹரிப்பிரியா தனது பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் இருந்து வந்தார். இந்த நிலையில் பக்கத்து கிராமமான வலசேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் பிரகாசுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி இருவருக்கும் இடையே நெருக்கம் உருவான நிலையில் ஹரிப்பிரியா கர்ப்பமாகி கடந்த 22- 6- 2023 அன்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இச்சூழலில் குழந்தை பிறந்தவுடன் ஹரிப்பிரியாவுக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்த குழந்தை அல்ல என கூறி ஹரிப்பிரியாவை விட்டு பிரகாஷ் விலகியதாகவும், அதனை அடுத்து ஹரிபிரியா பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டி என் ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டதை அடுத்து டிஎன்டிஏ பரிசோதனையில் ஹரிப்பிரியாவுக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏ யுடன் பிரகாஷின் டிஎன்ஏ யும் ஒத்துப் போனதாக ஆவ்வாய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பிரகாஷை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு ஜாமினில் வெளிவந்த பிரகாஷ் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக தகவல் அறிந்த ஹரிப்பிரியா திடீரென இன்று பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தின் முன்பு தனது கைக்குழந்தையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் விளைவாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கரன் ஹரிப்பிரியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஹரிப்பிரியா காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார். ஹரிப்பிரியாவின் இந்த திடீர் காத்திருப்பு போராட்டத்தினால் காவல் நிலையம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






















