மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. மேலும் அப்பகுதி வாழ் மக்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீ பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு வைகாசி உற்சவம் கடந்த 13 ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது விழாவின் இரண்டாம் நாள் திருவிழாவாக சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பல்வேறு வீதிகள் தோறும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி வுலா வரும் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. அவ்வீதி உலாவின் போது பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வணங்கினார்கள்.























