திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று இளைஞர்களும் எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா? நாங்கள் யார் தெரியுமா என்று கேட்டு அந்த மூன்று இளைஞர்களும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதில் பலத்த காயம் அடைந்த கண்டக்டர் ஐயப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் பேருந்தில் தாக்கியவர்கள் குறித்து மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.
அவரளித்த புகாரின் பேரில் பேரம்பாக்கம் புதிய காலனியை சேர்ந்த அய்யனார் மகன் ராகேஷ் (21), இருளஞ்சேரி கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரத் மகன் முகேஷ் (20), அரக்கோணம் தாலுக்கா பழைய கேசாவரம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜ் மகன் குணால் (19) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.



















