காஞ்சிபுரம், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார்.
கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை கிளம்பி ராமேஸ்வரம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது காசியில் உலக நன்மைக்காக லக்க்ஷ மோதக கணபதி யாகம், அதிருத்ர மகா யாகம், சண்டியாகம் ஆகியவை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை அவரதுத் திருக்கையால் நடத்தி வைத்து விட்டு தற்போது திருப்பதியில் உள்ளார்.
அதனையடுத்து எதிர் வரும் 20 ஆம் தேதியன்று மாலை காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்துக்கு திரும்ப உள்ளார். சுவாமியை வரவேற்க ஸ்ரீ காஞ்சி சங்கர மட நகர வரவேற்பு கமிட்டி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் வகையில், காஞ்சிபுரம் நகர புறநகர் பகுதியான சர்வதீர்த்த குளம் அருகே வருகை புரியும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பல்வேறு திருக்கோயில்கள் சார்பாக பிரசாதம் மற்றும் பூரண கும்பம் அளிக்கப்பட்டு, அங்கிருந்து ரத வாகனத்தில் சிவ வாத்தியங்கள், மேளதாளம், வேத பாராயணம், நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம் என பல்வேறு நிகழ்வுகளுடன் ஊர்வலமாக சங்கர மடம் வருகை புரிகிறார்.
அதனைத்தொடர்ந்து சுவாமிகள் அங்குள்ள ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சுவாமிகள் அனுஷ்டானத்தில் பூஜையில் மேற்கொள்ள உள்ளார். அதன் தொடர்ச்சியாக சங்கரமடத்தில் சந்திர மௌலிஸ்வரர் பூஜையைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக வரவேற்பு கமிட்டி குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஸ்ரீ சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசன் மற்றும் வரவேற்பு குழு கமிட்டி உறுப்பினர்கள் உடனிருந்தனர்




















