பழவேற்காடு, ஆக. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மற்றும் ஆந்திர உள்ளிட்ட 69 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது, பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியாகும்.
இந்நிலையில், முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும் அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை மீனவர்களே நங்கள் சொந்த செலவில் தற்காலிகமாக தூர்வாரி வரும் நிலையில், நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்பாட்டு சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இப்பணிகள் ஏறக்குறைய 3 மாதங்களில் நிறைவுப்பெற்று, படகுகள் எளிதாக அவ்வழியாக செல்லும் எனவும், மேலும் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வரும் 69 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பயனடைவார்கள் என அவ்விழாவின் போது, எம்பி தெரிவித்தார்.
இந்நிலையில் பணிகள் தொடங்கயிருந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் பணிகளை தடுத்து நிறுத்தினார். அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அப்பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆனால் ஒப்புதல் கிடைக்க நேரம் வேண்டும் என அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இந்நிலையில் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜகவினர் பலர் முகத்துவரம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள சென்றனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முறையான அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அப்பகுதிக்கு செல்ல முடியும் என அவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.
இதற்கிடையே தடையை மீறி அம் முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம், மாநில இளைஞரணி செயலாளர் வினோத் பி செல்வம், மாவட்ட தலைவர் செந்தில், உள்ளிட்ட பாஜவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பழவேற்காட்டில் கைது செய்யப்பட்டனர்,
அந்நிகழ்விற்கு பின்பு ஒன்றுக்கூடிய பாஜகவினர் அச்செயலைக் கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பழவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் பாடியநல்லூர் சோழவரம் மாவட்ட பகுதிகளில் பாஜகவினர் சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்யச் சென்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜக வினரை கைது செய்ததது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பழவேற்காடு பகுதியில் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




















