கூடுவாஞ்சேரி, மே. 10 –
சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரவு 10-மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய போதை ஆசாமிகள் இருவர் பேருந்தில் இருந்த சக பெண் பயணிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பயணிகள் ஓட்டுநரிடம் கூறி உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் கூடுவாஞ்சேரி காவல் நிலைய வாசலில் பேருந்தை நிறுத்தி விட்டு காவல் நிலையத்தின் உள்ளே சென்று நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். தொடர்ந்து பேருந்தின் உள்ளே ஏறிய போலீசார் மதுபோதையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். அதில் இருவரும் சாயல்குடியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் செந்தூர பாண்டியன் என்பதும் சென்னையில் தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் மாரிமுத்து மற்றும் செந்தூர பாண்டியன் ஆகிய இருவரையும் எச்சரித்த போலீசார் மாற்று பேருந்தில் அவர்களை அனுப்பி வைத்தனர்.



















