செங்கல்பட்டு, மே. 10 –
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஜேசிபி இயந்திரம் முன் பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து 30-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் கடைகள் மற்றும் குடியிருப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி பொத்தேரி தாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதிக்கு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, அங்கிருந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் திடீரென ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து கட்டடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தார். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கட்டிடங்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.























