கும்மிடிப்பூண்டி, ஏப். 02 –
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் மூத்த மகள் வைதேகி கழிப்பறைக்கு சென்ற போது ஏதோ கடித்தது போல் தெரிந்தவுடன் வைதேகி தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக தந்தை டார்ச்லைட் உடன் வெளியே வந்து பார்த்த போது அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வைதேகியை பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் வைதேகி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் சோம்பட்டு கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.






















