கும்பகோணம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோகமாதாவாகிய ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலயத்தில் 133 ஆம் ஆண்டு வைகாசி பிர்மோத்ஸவத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது .
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது. சுந்தரமகாகாளியம்மன், ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் பச்சைக்காளிக்கு (அக்காவிற்கு) குழந்தைகள் இல்லாததால் பவளக்காளியின் (தன் தங்கையின்) குழந்தைகளையும், தங்கையையும் பார்ப்பதற்காக தின்பண்டங்களை வாங்கிச்செல்கிறார். தங்கையோ, அக்கா பொறாமைப்படுவாள் என்று குழந்தைகளை தன் புடவையால் போர்த்தி மறைக்கிறார். கோபப்பட்ட பச்சைக்காளி குழந்தைகள் கல்லாகும்படி சபித்துவிடுகிறார். தன் தவறை உணர்ந்த பவளக்காளி, பச்சைக்காளியிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். பச்சைக்காளியான அக்கா, புனித நீர் தெளித்து தன் தங்கையான பவளக்காளியின் குழந்தைகளை உயிர்ப்பிக்கிறார். இதனை விளக்கும் வகையில் நடைபெறுவதே படுகளக்காட்சியாகும்.அப்போது கோயிலின் முன்பாக உள்ள பக்தர்கள் மீது புடவை போர்த்தப்பட்டு, அவர்கள் மேல் மஞ்சள் நீர் தெளித்து, அவர்களின் பாவங்களைப் போக்கும் நிகழ்வு நடைபெறும்.
இத்தகைய சிறப்பு பெற்ற ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி பிர்மோத்ஸவப் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான இன்று கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பிறந்த வீட்டுக்குச் செல்லும் நிகழ்வு, நகர்வலக்காட்சிகள் நடைபெற்றது. நாளை காவிரியாற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரைடன் பச்சைக்காளியும், பவளக்காளியும் வீதியுலாவும். நாளை மறுநாள் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி ஆலயம் திரும்புதல். வருகிற 22 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிர்மோத்ஸவப் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.





















