திருவாரூர், செப். 22 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் மற்றும் வைகைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
அப்போது, சிறப்புரை நிகழ்த்திய வைகைசெல்வன் ஓபிஎஸ் ஒரு காலாவதியான மாத்திரை அது இனி பயன்படாது எனவும், மேலும், எதிர் வரும் 30 நாளில் எடப்பாடியார் பொதுச் செயலாளராக வரப்போகிறார் என்றும் அதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று மாதத்தில் முதலமைச்சராக வரப்போகிறார் எனவும் பேசினார்.
மேலும், அமமுக என்றொரு கட்சி உள்ளது. ஆனால் அது ஒரு கறிக்கோழி எனவும், அது தின்னு தின்று கொழு கொழுவென்று வளருமே தவிர குஞ்சு பொறிக்காது என்றார். தொடர்ந்து பேசுகையில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என புகழாரம் சூட்டிக் கொள்கிறார். அதில் முத்துவேல் என்பவர் பெரிய உப்பு சத்தியாகிரகம் செய்த தியாகியா? கருணாநிதி என்ன செக் இழுத்த செம்மலா? இல்லை அவர் சர்க்காரியா குற்றவாளி எனவும் அவர் உரை நிகழ்த்தினார்.
அதுப்போன்று கமலஹாசன் மக்கள் நீதி மையம் எனும் கட்சி தொடங்கினார். சரி அவர் நல்லவர் என நினைத்தேன் ஆனால் விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலிடம் 200, 300 கோடிக்கு விற்றுள்ளார். நான் அப்பவே சொன்னேன் சப்பானியும் பரட்டையும் கட்சி தொடங்கப் போறான்னு கேள்விப்பட்டு குவைத்தில் மயில் செத்து போயிட்டு, மயில் என்பது ஸ்ரீதேவி, சப்பானி என்பது கமலஹாசன், பரட்டை என்பது ரஜினி, நல்லவேளை ரஜினி கட்சி தொடங்கவில்லை, சப்பானி தொடங்கிய கட்சி சப்பானியா போச்சு எனவும் அனைத்து கட்சிகளையும் காட்டமாக விமர்சித்து பேசினார். மேலும் இந்த நிகழ்வில் 3000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.






















