பொன்னேரி, ஜூலை. 14 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பொன்னேரி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் அவரிடம் வழங்கினார்,
மேலும் அவர் வழங்கிய மனுவில், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் எனவும், மேலும் அக்டோபர் 2023 வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முழுமையாக முடிக்க உறுதி செய்ய வேண்டும் எனவும், சில இடங்களில் விடுபட்டப் போன பணிகளை உடனடியாக முடிக்க ஆவணம் செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துளாளர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி ஐஏஎஸ் பணி நடைப்பெற்று வரும் அனைத்து இடங்களுக்கும் சென்று நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.






















