தஞ்சாவூர், மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14 இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில்) பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

பேராவூரணி மெயின் ரோட்டில் நெருக்கடி மிக்க பகுதியில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அருகிலேயே காய்கறி, மளிகை, பூக்கடைகள் உள்ளதால் இப்பகுதியில் எப்போதும் ஜனநெருக்கடி இருக்கும். இந்நிலையில் பிரியாணி வாங்க ஆட்களும் குவிந்தனர். அதிமுக நிர்வாகிகள் வந்த வாகனங்களும் சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டு இருந்தது.  இதனால் இருவழிச்சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், சில பெண்கள் பிரியாணியை வாங்கி கட்டைப்பையில் அடுக்கி சென்றதையும் காண முடிந்தது. மதுப்பிரியர்களை பிரியாணி பார்சலை வாங்கி சைட் டிஷ்க்காக பிளாஸ்டிக் கவரில் பத்திரப்படுத்தி எடுத்து சென்றனர்.

முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி.சேகர் தலைமை வகித்து பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முத்தாய்ப்பாக பிரியாணியை முன்னாள் எம்எல்ஏக்களான சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), திருஞானசம்பந்தம் (பேராவூரணி) உள்ளிட்ட தலைவர்களும் ருசி பார்த்து சென்றனர். எது எப்படியோ 2000 க்கும் மேற்பட்டோர் வயிறு நிறைய சாப்பிட்டு, மனம் மகிழ்ந்து வாழ்த்திச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here