திருவாரூர், செப். 08 –
திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவர பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து மாணவி, தீனதயாளனிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீனதயாளன், மாணவியை பொது இடத்தில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவியின் தாயார் தீனதயாளன் வீட்டிற்கு சென்று முறையிட்டுள்ளார். இந்நிலையில் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுக்கா காவல்நிலைய போலீஸார் தீனதயாளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






















