திருவாரூர், செப். 07 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களோடு அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோதண்ட ராமர் ஆகியோர் புறப்பட்டு வீதி வழியாக வலம் வந்து, அதனைத்தொடர்ந்து ஆலய வலம் வந்து, விமான கோபுரத்தை அடைந்தது. சரியாக காலை 10.30மணி அளவில் விமான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை அரசவனங்காடு திருப்பணி குழு மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சர்வசாதகமாக திருச்சேறை இராமன் பட்டாச்சாரியார் மற்றும் ஆலய அர்ச்சகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யாக பூஜைகளை மேற்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.






















