பொன்னேரி, ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர் பாக்யராஜ். உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூன்று நாள் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று தனித்துறை அமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
இந்நிலையில் மீஞ்சூர் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சோழவரம் பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் வட்டார ஊழியர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை உதிரியாக வழங்குவதால் விற்பனைக்காக கையாளும் பொழுது பொருட்கள் கீழே சிந்துவதால் எடைக் குறைவு ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்க பேக்கிங் முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.