கும்பகோணம், செப். 07 –
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள பெரியாண்டவர் மற்றும் பெரிய நாயகி அன்பாளான அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் கிரியா சக்தி ரூபமாகவும், மேலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என ஐந்து வகை தொழில்களுக்கான தலைவியாக திகழும் அன்னை பராசக்தி இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும், அங்காள பரமேஸ்வரி அம்மனாகயிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, தசமி திதி, உத்திராட நட்சத்திரம், கன்னியா லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் திருமந்திரம் ஓதி சிவாச்சாரியர்கள் ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மனமுவர்ந்து மயிலாடுதுறை மருத்துவர் பாலாஜி மற்றும் ஆலய நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.





















